சீனிராஜ் சிவகுமார்
வரைபடத்து நதியைப் - போல்
வெட்டுகின்ற மின்னல்
தெருவிளக்காய் அடிக்கும் - பின்
தார்பூசும் இருட்டு
பாலித்தீன் பைக்குள் - தலை
பத்திரமாய் இருக்கும்
ஓலமிடும் காற்றில் - சருகு
ஓடி விளையாடும்
வீடு வந்து சேர்ந்தேன் - அவ்
வினாடி முதல் வானம்
காடுகரை ஊர்கள் - தமைக்
குளிப்பாட்டு தம்மா
மழை பெய்த வேளை - என்
மனசெங்கும் ஈரம்
அழுக்கான எந்தன் - சிறு
அரண்மனையா தப்பும்?
மகன் படிக்கும் ஏட்டை - வான்
மழை வந்து படிக்கும்
புக வசதி செய்து - கூரை
பூப்பூவாய்த் தெளிக்கும்
பருப்பு வைத்திருந்த - மண்
பானைக்குள் இன்று
கருப்பு நிற திரவம் - மனம்
கண்ணீரில் மூழ்கும்
அகல் வெளிச்சம் நடுங்க - என்
அரசி முகம் இருளும்
யுக அவதி மறைய - நல்
இயற்கையென்று அருளும்?
தற்காலிக நதியாய்- எம்
தெரு நிறைந்து பாயும்
விற்காமல் கிடக்கும் - முள்
விறகு படகாகும்
விரும்பியழைக்காமல் - நீர்
வீட்டுக்குள் நுழையும்
இரண்டடிக்கு மேலே - அட
உயர்ந்ததம்மா வாழ்க்கை
கட்டில்மேல் குடும்பம் - இடம்
கிட்டாமல் விழிக்கும்
பெட்டியையும் தூக்கி - இடப்
பக்கத்தில் வைத்தோம்
அடுப்படியில் பசியை - மழை
அணைத்து விட்டிருக்க
இடிக்குரலில் வானம் - எனை
எள்ளி நகையாடும்.
2007